அமெரிக்க உளவுத்துறை ரகசியங்களை வெளியிட்ட எட்வார்ட் ஸ்னோடன், ஹாங்காங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றடைந்தபின், அங்கிருந்து மறுநாளே கியூபா ஊடாக வெனிசூலா செல்வதற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த விமானத்தில் அவர் செல்லவில்லை.
இதற்கு என்ன காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது.ரஷ்ய விமான சேவை ஏரோஃபுளோட், ஸ்னோடனை ஏற்றிக்கொண்டு கியூபா தலைநகர் ஹவானாவுக்கு வந்தால், அந்த விமானத்தை இறங்க அனுமதிப்பதில்லை என கியூபா முடிவு செய்திருந்தது.
இந்த விஷயம், ரஷ்ய அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்படவே (ரஷ்யாவும், கியூபாவும் கூட்டாளிகள்), கடைசி நிமிடத்தில் அந்த விமானத்தில் ஏற வேண்டாம் என ஸ்னோடன் அறிவுறுத்தப்பட்டார் என்பதே தற்போது தெரியவந்துள்ள விஷயம்.
ரஷ்ய மீடியாக்களில் இந்த தகவல் நேற்றிரவு வெளியானது. அதற்கு ரஷ்யாவோ, கியூபாவோ மறுப்பு ஏதும் (இதுவரை) தெரிவிக்கவில்லை.
சரி. கியூபா எதற்காக இப்படி ஒரு முடிவுக்கு வந்தது? அமெரிக்க அழுத்தம் காரணமாகவா? 50 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க எதிர்ப்பு நிலை எடுத்துள்ள கியூபாவுக்கு அமெரிக்காவால் அழுத்தம் கொடுத்திருக்க முடியுமா? அப்படி கொடுக்க வேண்டுமானால், அது, எவ்வளவு பெரிய அழுத்தமாக இருந்திருக்க வேண்டும்?
ஊகும். ஸ்னோடனை ஏற்றிக்கொண்டு கியூபா தலைநகர் ஹவானாவுக்கு ரஷ்ய விமானம் வந்தால், விமானத்தை தரையிறங்க அனுமதிப்பதில்லை என கியூபா முடிவு செய்வதற்கு வேறு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும்! அல்லது இந்த கதையே தற்போது ‘ஏதோ’ காரணத்துக்காக ரஷ்ய மீடியாக்களால் இட்டுக் கட்டப்பட்ட கதையாக இருக்க வேண்டும்.


